அரபிக்கடலில் உருவானது "வாயு" புயல்.. குஜராத் பக்கம் நகர்கிறது.. தமிழகத்துக்கு மழை இல்லை
அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கிறது
Recommended Video
மும்பை: அரபிக்கடலில் புயல் உருவாகிவிட்டது. நேற்றெல்லாம் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு தற்போது புயலாக மாறி உள்ளது.
தென்மேற்கு பருவமழை முதலில் கேரளாவில் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல்
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவினை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை
இதன் காரணமாக கேரளா, கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வாயு புயல்
இதனால் மீனவர்கள் யாரும் அரபிக்கடல் பக்கம் போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. வானிலை மையம் அறிவிக்கப்பட்டபடியே அரபிக்கடலில் இன்று புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு 'வாயு' என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மழை இல்லை
இந்த புயல் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் கனத்த மழையும், உள்மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று கூறினார்கள். ஆனால், சொல்லிக் கொள்கிற அளவுக்கு மழை இருக்காது போல தெரிகிறது.

கரையை கடக்கும்
ஏனெனில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த புயல், குஜராத்தின் போர்பந்தர், மஹூவா பகுதியில் ஜுன் 13-ம் தேதி அதாவது நாளை மறுநாள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கட்ச் பகுதி
அந்த சமயத்தில், 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுமாம். வடக்கு நோக்கி இந்த புயல் நகர்கிறது. அதிலும் குஜராத் பக்கம் நகர்வதால், அங்குதான் 13, 14 தேதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில்தான் கனமழை பெய்யும் என்றும், எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குடகில் மழை
வாயு புயலால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மழை இல்லாவிட்டாலும், ஒரே ஒரு ஆறுதல் தகவல் என்னவென்றால், குடகு பகுதியில் நல்ல மழை பெய்யும் என்பதுதான். குடகில் மழை பெய்தால், அது காவிரிப் பாசனத்தை நம்பி இருக்கும் இரு மாநில விவசாயிகளுக்கும் தெம்பை தரும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications