ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு தேதி... நீதிபதி குமாரசாமி அறிவிப்பு
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளதையடுத்து வழக்கு கிளைமேக்ஸை எட்டியுள்ளது.
தீர்ப்பு தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி கூறியுள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 38-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து கடந்தவாரம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை தொடங்கினார். அவ்வப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பவானிசிங், சில நாட்கள் விடுமுறை கேட்டார்.
பவானிசிங் நிறைவு
சிலதின விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை முதல் வாதம் செய்த பவானிசிங் ஆறாவது நாளாக இன்றும் இறுதிவாதம் செய்தார். ஒருவழியாக உணவு இடைவேளைக்கு முன்னதாக தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார் பவானிசிங்.
திருப்தியில்லையே
நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார்.
எழுத்துப்பூர்வ பதில்
அதற்கு பதிலளித்த பவானி சிங், "பதில் அளிக்காத கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கிறேன். இப்போது என் வாதத்தை நிறைவு செய்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இறுதி தொகுப்புரை
பவானிசிங்கிற்குப் பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர் ராவ் இறுதி தொகுப்புரை வழங்கினார். அனைத்து தரப்பு வாதங்களும் ஒருவழியாக நிறைவடைந்தன.
தீர்ப்பு எப்போது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசியலில் பரபரப்பு
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பினை அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தனது எம்.எல்.ஏ பதவி, முதல்வர் பதவியை இழந்தார். இதனையடுத்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். நீதிபதி குமராசாமி அளிக்கப்போகும் தீர்ப்புதான் அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பாகும். தண்டனையில் இருந்து தப்புவாரா ஜெயலலிதா? அல்லது மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கே செல்வாரா? அடுத்தவாரம் தெரியவரும்.