இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஜெயலலிதாவின் 22 நாள் சிறைவாசம்
பெங்களூர்: 22 நாட்களாக இந்தியாவின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஜெயலலிதாவின் சிறைவாசம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இன்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையானார் ஜெயலலிதா.
1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாதம் ரூ1 தான் ஊதியமாக பெற்றார் ஜெயலலிதா. ஆனால் 5 ஆண்டுகால முடிவில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகாலமாக சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் எட்டிப் பார்த்து தட்டிப் பார்த்து கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
செப். 27-ந் தேதி தீர்ப்பு
சென்னை நீதிமன்றங்கள், பெங்களூர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் என வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறக் கூடிய வகையில் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
4 ஆண்டு தண்டனை- ரூ100 கோடி அபராதம்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. அத்துடன் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவே அதிரும் வகையில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் குன்ஹா.
போனது முதல்வர் பதவி
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவரது முதல்வர் பதவியும் இல்லாமல் போனது.
10 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது
இந்த தீர்ப்பினால் ஜெயலலிதா மொத்தம் 10 ஆண்டுகாலம் தேர்தலில் அதாவது 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உருவானது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியாது. உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும்.
2வது முறை சிறைவாசம்
இதனால் தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே ஜெயலலிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ராக சிறைக்குள் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு கலர் டிவி வழக்கில் முதல் முறையாக சிறைக்குச் சென்றார். அப்போது 28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து 2வது முறையாக ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.
கொந்தளித்த அதிமுக
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவின் கொந்தளித்தனர்.. குமுறினர்... நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வன்முறைகள் அரங்கேறின.. ஜெயலலிதாவுக்காக பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
ஜாமீன் மனு
இந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ந் தேதியன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
ராம்ஜெத்மலானி
கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு தசாரா விடுமுறை என்பதால் விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா முன்பு செப்டம்பர் 30-ந் தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காகவே லண்டனில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பெங்களூருக்கு வந்து ஆஜரானார். ஆனால் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்தி வைக்க அதிர்ச்சியில் உறைந்தனர் அதிமுகவினர்.
ஜாமீன் நிராகரிப்பு
ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்டோபர் 7-ந் தேதியன்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அத்துடன் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் அதிரடியாக பல்டி அடித்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார். இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் பரபரப்பட்டு கொண்டாடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை இல்லை என்று கூறியதையும் நிராகரித்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை அதிரடியாக தீர்ப்பளிக்க ஆடிப்போயினர் அண்ணா திமுகவினர்.
உச்சநீதிமன்றத்தில்..
இதனால் வேறுவழியின்றி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 9-ந் தேதியன்று ஜெயலலிதா மட்டும் முதலில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவரை விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அக்டோபர் 10-ந் தேதியன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை எப்போது எனத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர் அதிமுகவினர். இந்த மனுக்கள் மீது அக்டோபர் 14-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது.
17-ந் தேதி விசாரணை
பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அதிமுக வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியதால் நேற்று ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நீதிபதி முன்னிலையில் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் எனத் தெரியாத நிலை இருந்தது.
தலைமை நீதிபதி பெஞ்ச்
இந்த நிலையில் நேற்று முன் தினம் நீதிபதிகள் விக்ரம்ஜித்சென், பிரபுல்லபந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்பட்டது. பின்னர் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் லோகுர், சிக்ரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
பாலி நாரிமன்- நிபந்தனை ஜாமீன்
ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 18-ந் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தொடர்பான அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
எச்சரிக்கை
அத்துடன் டிசம்பர் 18-ந் தேதிக்கு மேலும் ஒரு நாள்கூட ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் தாமதித்தால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு ரத்தாகிவிடும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது.
விடுதலை
இதனைத் தொடர்ந்து ஜாமீன் கிடைத்த உத்தரவு பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளின்படி இன்று சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.