மைசூரு தசரா விழா - ஜம்பு சவாரி யானைகளுக்கு பிரியா விடை கொடுத்தனர் மக்கள்!
மைசூரு: மைசூருவில் தசரா யானைகளுக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தசராவில் கலந்து கொண்ட 12 யானைகளும் பிரியா விடைபெற்று சென்றன.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 23 ஆம் தேதி ஜம்பு சவாரியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 40 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு யானைகள் முகாமில் இருந்து 12 யானைகள் மைசூருவுக்கு வந்தன.
அந்த யானைகளுக்கும், அவற்றின் பாகன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜம்பு சவாரி ஊர்வலம்:
மைசூருவில் யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜம்புசவாரி ஊர்வலம் முடிவடைந்ததும், யானைகள் அனைத்தும் அரண்மனை வளாகத்தில் ஓய்வு எடுத்தன. தற்போது தங்க அம்பாரி சுமந்த அர்ஜூனா யானை உள்பட 12 யானைகளும் நேற்றுமுன்தினம் தங்கள் சொந்த முகாமிற்கு திரும்பின.
சிறப்பு பூஜைகள்:
அந்த யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் சம்பிரதாயப்படி சிறப்பு பூஜைகள் செலுத்தப்பட்டன. இதில் வனத்துறையினர், மாவட்ட பொறுப்பு மந்திரி சீனிவாச பிரசாத், மாவட்ட கலெக்டர் ஷிகா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி புஷ்பாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர். தசரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட யானைகளின் பாகன்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
யானைகளுக்கு பிரியா விடை:
பின்னர் தசரா ஊர்வலத்தில் தங்க அம்பாரி சுமந்த அர்ஜூனா, பலராமா, விக்ரமா, காவேரி, ஹர்ஷா, கோபி, பிரசாந்தா, சைத்ரா, கோபால்சாமி, துர்கா பரமேஸ்வரி, அபிமன்யு, முதல்முறையாக தசரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட 21 வயதான கெஞ்சம்பா ஆகிய 12 யானைகளும் பிரியா விடை பெற்றன.
முகாமிற்கு திரும்பின:
லாரிகள் மூலம் அந்தந்த யானைகள் முகாமிற்கு சென்றன. மைசூரு அரண்மனை முன்பு ஏராளமான மக்கள் திரண்டு, யானைகளை ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications