குழந்தை திருமண விழிப்புணர்வு – நியூயார்க்கில் உரை ஆற்றப் போகும் சைக்கிள் மெக்கானிக் மகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சைக்கிள் மெக்கானிக் ஒருவரின் மகள், குழந்தைத் திருமணம் குறித்து நியூயார்க்கில் உரையாற்ற தேர்வாகியுள்ளார்.
ராஞ்சி மாவட்டத்தில் வசித்து வரும் தபு அப்ரோஸ் எனும் 17 வயது சிறுமி, அவரது 15 வது வயதில் இருந்து குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார்.
சைக்கிள் மெக்கானிக்கின் மகளான தபுவிற்கு 15 வயதாகியிருந்த போது, அவரது அக்காவிற்கு 17 வயதாகியிருந்தது.
குழந்தை திருமணம்:
அப்போது அவரது பெற்றோர் அவரை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டு திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
அக்கா திருமணத்தை நிறுத்திய தபு:
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தபு, ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு தனது பெற்றோருக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சிக்கல்களை புரியவைத்துள்ளார்.
புரிந்து கொண்ட பெற்றோர்:
இதையடுத்து தபுவின் பெற்றோர் மூத்த மகளின் திருமணத்தை நிறுத்தி, அவரை படிக்கவைத்துள்ளனர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்:
அதன் பின் தனது பகுதியிலும், பக்கத்து ஊர்களிலும் பெண் கல்வி, குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தபு ஈடுபட்டு வந்துள்ளார்.
நியூயார்க்கில் உரை:
தபுவின் சமூக சேவையை ஊக்குவிக்கும் விதமாக "பிரேக் த்ரூ" எனும் தொண்டு நிறுவனம் நியூயார்க்கில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் உரையாற்ற தபுவை அழைத்துள்ளனர்.
தபு மட்டுமே தேர்வு:
இந்தியாவில் இருந்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற தபு மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏழ்மையான சூழ்நிலைதான் காரணம்:
தபுவின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது தந்தை, "நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் சிறு வயதிலேயே மகள்களுக்கு திருமணம் செய்துவிடுவோம்.
பெருமை தேடித்தந்த பெண் குழந்தைகள்:
ஆனால், இப்போது எனது மகள்கள் படிக்கிறார்கள் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து, சிறப்பான வாழ்க்கை அமையுமென்று எனக்கு தெரியும்" என சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.