தந்தையை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்துக் கொன்ற மகள்.. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்!
டெல்லி: பாலியல் சீண்டல் செய்து வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்தபோது கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்துக் கொலை செய்த மகள் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு டெல்லி பகுதியில் வசித்தவர் தல்ஜீத் சிங் (56). தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த வாரம் கண்டா நலா ரோடு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது நெஞ்சு பகுதி கீறப்பட்டிருந்தது. தலையில் அடிபட்ட காயங்கள் இருந்தன. அவர் யார் என்று அடையாளம் தெரியாத போலீசார் பத்திரிகைகளில் அவரது படத்தை வெளியிட்டு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
பத்திரிகையொன்றில் படத்தை பார்த்த தல்ஜீத் சிங்கின் உறவுக்காரர்களில் ஒருவர் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு விவரம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் தல்ஜீத் சிங் வீட்டுக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
தல்ஜீத்சிங்கின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் வீட்டில் மகள் குல்விந்தர் கவுர் மட்டும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். எனவே குல்விந்தர் கவுரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். தனது தந்தை ஹரித்துவாருக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு சென்றதாகவும், இங்கே எப்படி இறந்தார் என்பது தெரியாது என்றும் கூறினர். தல்ஜித் சிங் வேலை பார்த்த டிராபல்ஸ் நிறுவனத்தில் போலீசார் விசாரித்தபோது, ஹரித்துவாருக்கு செல்லுமாறு தல்ஜித்தை தாங்கள் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் போலீசாருக்கு குல்விந்தர் கவுர் மீது சந்தேகம் இறுகியது. விசாரணையை மேலும் நெருக்கியதும், குல்விந்தர் கவுர், தனது தந்தையை கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
எனது தாயார் மரணமடைந்தது முதல், எனது தந்தை பாலியல்ரீதியாக எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதில் எனக்கு உதவ பிரின்ஸ் சந்து மற்றும் அசோக் சர்மா ஆகிய எனது நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். சம்பவம் நடந்த தினத்தன்று இரவு, வீட்டு கதவை வேண்டுமென்றே திறந்து வைத்துவிட்டேன். இரவு நேரத்தில் நண்பர்கள் இருவரும் வீட்டுக்குள் வந்து தூங்கிக்கொண்டிருந்த எனது தந்தையை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொலை செய்தனர்.
எனது தந்தை இதய பாதிப்புக்காக பேஸ்மேக்கர் பொருத்தியிருந்தார். எனவே தலையில் அடித்த பிறகும் பிழைத்துவிடக்கூடாது என்பதற்காக, ஜன்னலை உடைத்து அதில் இருந்த கண்ணாடியை
கொண்டு அவரது நெஞ்சு பகுதியை கீறி, உள்ளேயிருந்த பேஸ்மேக்கரை அகற்றினோம். பின்னர் உடலை கண்டாநலா ரோட்டுக்கு அருகே வீசிவிட்டு வந்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த பிரின்ஸ் சந்துவையும், அசோக் சர்மாவையும் போலீசார் கைது செய்தனர். ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஊரை சுற்றுவதை கண்டித்ததற்காக தந்தையை கொலை செய்துவிட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்ததால் கொன்றதாக குல்விந்தர்கவுர், கதைவிடுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.