ரவுடியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற 6 போலீஸ்காரர்கள் டிஸ்மிஸ்
டெல்லி: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதியோடு ஷூ வாங்க கடைக்கு சென்ற 6 போலீசாரின் வேலை பறிபோயுள்ளது.
ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன் பிறகு திகார் சிறைக்கு வரும் வழியில் தனக்கு ஷூ வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுமாறும், அவ்வாறு அழைத்துச் சென்றால் போலீசாருக்கும் ஷூ வாங்கிக் கொடுப்பதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து துணை சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மனோஜுடன் ஷாப்பிங் சென்றுள்ளனர். போலீசார் கைதியுடன் ஷாப்பிங் வந்ததை பார்த்த கடைக்காரர் தனது பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் கேமராவில் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைதியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற 6 போலீசாரையும் வேலையை விட்டு நீக்கி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். டெல்லி போலீசாரின் திறமை பற்றி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து இது தொடர்பாக விவாதம் நடத்த தயாரா என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி கெஜ்ரிவாலிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் இந்த ஷாப்பிங் சம்பவம் நடந்துள்ளது.