2ஜி: தயாளு, கனிமொழி, ராசா மீதான அமலாக்க துறை 'சார்ஜ்ஷீட்' மீது மே 2-ல் உத்தரவு- டெல்லி கோர்ட்
டெல்லி: கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட 19 பேருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததற்கு மாறாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இப்படி பணம் கைமாறியதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டு மோசடி செய்துள்ளனர் என்பது அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படி செய்யப்படவில்லை.
திடீரென தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த மறுநாள் அமலாக்கப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேர் மீது இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
சந்தேகமளிக்கும் பணபரிமாற்றம்
இன்றைய விசாரணையின் போது அமலாக்கபிரிவினர் முன்வைத்த வாதம்:
ஸ்வான் நிறுவனமானது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக பெற கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது.
சிபிஐ விசாரணைக்கு அழைத்த உடனேயே ஸ்வான் நிறுவனத்துக்கு ரூ200 கோடியை கலைஞர் டிவி திருப்பி கொடுத்துவிட்டது. அதாவது கடனாக வாங்கியதாக சொல்லப்படும் இவ்வளவு பெரிய தொகை மீது சந்தேகத்துடன் விசாரணை நடத்தப்படும் நிலையில் உடனேயே திருப்பி கொடுக்கப்பட்டுவிடுகிறது.
இப்படி ஸ்வானுக்கு கலைஞர் டிவியானது பணத்தை திருப்பி கொடுத்த காலம் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அத்துடன் கலைஞர் டிவிக்கு ஸ்வான் நிறுவனம் ரூ200 கோடியை கடனாக கொடுத்தது என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு அமலாக்கப்பிரிவு தமது வாதத்தை முன்வைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த குற்றப்பத்திரிகை மீது நாளை மறுநாள் மே 2-ந் தேதியன்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.