கபில்சிபல் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆம் ஆத்மியின் சாஷியா இல்மிக்கு கோர்ட் பிடி வாரண்ட்!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சாஷியா இல்மிக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினருக்கு இது அவதூறு வழக்கு நேரம் போல.. பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்காரியை ஊழல்வாதி என்று அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்ததற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கில் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் முதலில் கேஜ்ரிவாலுக்கு 2 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது ஜாமீன் தொகை கட்ட முடியாது.. அப்படி ஜாமீன் பெற்றால் கட்காரி ஊழலற்றவர் என்றாகிவிடும் என்று கேஜ்ரிவால் மறுத்தார்.
இதனால் அவரை மேலும் 14 நாட்கள் சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவரான சாஷியா இல்மியும் அவதூறு வழக்கில் சிக்கியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் மகன் அமித்சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கில் இல்மிக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இல்மி ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியில் இருந்து சாஷியா இல்மி விலகக் கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications