ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை நெறித்துக் கொலை - டெல்லியில் "ஷாக்"!
டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பழைய ராஜேந்திர நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் டெல்லி அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் குமாஸ்தா ஆக பணிபுரிந்தார். பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக இவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
எனவே அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதிசவாரியா. மகன் பவன் ஆகியோர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆவது மாடியில் தங்கியிருந்தனர். நேற்று காலை வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டில் பொருட்கள் சிதறி அலங்கோலமாக கிடந்தன. படுக்கை அறையில் ஜோதியும், அவரது மகன் பவனும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். ஜோதியின் உடல் துப்பட்டாவால் மூடப்பட்டிருந்தது. பவனின் உடல் படுக்கை கீழே குப்புற கிடந்தது. அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.
இவர்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர். வீட்டில் ஜோதியின் கணவர் சஞ்சயைக் காணவில்லை. எனவே, இக்கொலைகளை அவர்தான் செய்து இருக்க வேண்டும் என போலீசார் கருதினர். ஆனால் மற்றொரு படுக்கையில் அவரும் பிணமாக கிடந்தார். அங்குள்ள ஒரு அலமாரியில் அவரது பிணம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் இக் கொலைகளை செய்தது யார் என தெரியவில்லை. இதுகுறித்து அண்டை வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சஞ்சய்க்கும், சிலருக்கும் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறினர். சஞ்சய் கடன் வாங்கி தனது ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்தார். எனவே, அவருக்கு கடன் கொடுத்தவர்கள் 3 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கொலை நடந்த வீட்டில் 4 தட்டுகளில் பாதி அளவு சாப்பாடு கைப்பற்றப்பட்டது. எனவே, அவர்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கொலையாளிகள் வந்து இருக்கலாம் என தெரிகிறது. வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதால் அவர்களை ஓட, ஓட விரட்டி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.