நான் உண்மையைத்தானே சொன்னேன்.. ஷீலா தீட்சித்
டெல்லி: நான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசவில்லை. டெல்லியில் அரசமைப்பது தொடர்பாக நிலவும் நிலவரத்தைத்தான் நான் சொன்னேன். இதைத் திரித்துப் பார்க்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க தான் ஆதரவு தருவதாக கூறி அனைவரையும் அதிர வைத்தவர் ஷீலா தீட்சித். இது காங்கிரஸ் தரப்பில் பெரும் சலசலப்புகளைக் கிளப்பி விட்டது.
ஷீலா தீட்சித் பேச்சை காங்கிரஸார் பலரும் கண்டித்துள்ளனர். அதேசமயம் பாஜக அதை வரவேற்றுள்ளது.
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஷீலா தீட்சித். இதுதொடர்பாக பிடிஐக்கு அவர் அளித்த பேட்டி...
நான் என்ன சொன்னேன்
உண்மை நிலவரம் மற்றும் அரசியல் சட்டப்படியான நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் நான் எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
ஆதரவைத் திரட்ட வேண்டியது பாஜகவின் வேலை
காங்கிரஸும், ஆம் ஆத்மியும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் பெரும்பான்மை பலத்தை திரட்ட வேண்டியது பாஜகவின் கடமை.
அது காங்கிரஸ் வேலை அல்ல
அதைச் செய்ய வேண்டிய நிலையில் காங்கிரஸ் இல்லை. எங்களிடம் போதுமான உறுப்பினர்கள் இருந்தால் நாங்களே ஆட்சியமைத்திருப்போமே. எனவே நான் சொன்னது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில்தான்.
புரிஞ்சுக்கவே இல்லையே
நான் சொன்ன கருத்தை காங்கிரஸார் புரிந்து கொள்ள முயல வேண்டும். பாஜகவை நான் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. அப்படி ஒரு சிந்தனையே எனக்கு வராது.
ஆதரவுக்கு இங்கு என்ன வேலை
நான் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன், பாஜகவை ஆதரிக்கிறேனா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. முற்றிலும் அரசியல்சாசன நிலவரத்தைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன் என்றார் ஷீலா.
கெஜ்ரிவால் செய்த குழப்பம்
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில்யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் காங்கிரஸின் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்று ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சில நாட்களிலேயே ராஜினாமா செய்து போய் விட்டார். அன்று முதல் டெல்லியில் குழப்பம்தான். இப்போது பாஜக அங்கு ஆட்சியமைக்க முயல்கிறது. இந்த நிலையில் ஷீலாவால் குழப்பம் ஏற்பட்டு விட்டது.