சன் குழுமத்தின் ரெட் எப்.எம். பண்பலை ஏலத்தில் பங்கேற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி
டெல்லி: பண்பலை ஏலத்தில் பங்கேற்க ரெட் எப்.எம்.மிற்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எப்.எம்.ரேடியோக்களுக்கான பண்பலை ஏலத்தில் சன் குழுமத்தின் ரெட் எப்.எம். பங்கேற்க மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. டெல்லி மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ரெட் எப்.எம்.மிற்கு ஊழல் வழக்கில் தொடர்புடைய மாறன் சகோதரர்களுடன் தொடர்பிருப்பதால் ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பாதர் துரேஷ் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரெட் எப்.எம். சேனல் பண்பலை ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ரெட் எப்.எம்.மால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்பலை ஏலம் நாளை காலை 9.30 மணிக்கு துவங்க உள்ளது. ஏலம் துவங்குவதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பு அதற்குரிய சாப்ட்வேரை தயார் செய்ய வேண்டும். அதனால் தான் விடுமுறை நாளான இன்று சிறப்பு பெஞ்ச் கூடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக ரேடியோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு தொடர்பாக ரெட் எப்.எம். பண்பலை ஏலத்தில் பங்கேற்க கூடாது என்பது சரியல்ல. ரெட் எப்.எம்.மிற்கும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதிமாறனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு மறைமுகமாக எங்கள் நிறுவனத்தில் 21.6 சதவீத பங்குகள் உள்ளன என்றது.
கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவியின் துணை நிறுவனமான தெற்காசிய எப்.எம். நிறுவனம் மூலம் ரெட் எப்.எம். நிறுவனத்தின் 48.9 சதவீத பங்குகளை சன் குழுமம் கடந்த 2007ம் ஆண்டு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.