நாளை வரை சசிகலா புஷ்பாவுக்கு நிம்மதி- நடவடிக்கை கூடாது என டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு பாலியல் தொந்தரவு சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது நாளை வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ்யசபாவில், முதல்வர் ஜெயலலிதா என்னை அடித்தார் எனக் கூறி பரபரப்பை கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனையடுத்து சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் கிளம்பின. இதில் அவர் வீட்டில் வேலைபார்த்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் கொடுத்த புகார்கள் பயங்கரமான அதிர்ச்சியை ஏற்படுத்தின,
அதில் நிர்வாண மசாஜ், குடி கும்மாளம், பாலியல் தொல்லை என ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதர் துரேஜ் அகமதிடம் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் அபினவ் ராவ் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அப்போது தனது கட்சிக்காரர் சசிகலா புஷ்பா மற்றும் கணவர், மகன் ஆகியோர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கான மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதனையடுத்து சசிகலா புஷ்பா மற்றும் அவருடைய கணவர், மகன் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது வேறு ஒருவழக்கில் தந்த முன்ஜாமீன் விவரத்தை பாலியல் தொல்லை வழக்குடன் இணைத்து தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
பின்னர் பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது, சசிகலாவின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு முகாந்திரம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது நாளை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.