ஐஎஸ் அமைப்பில் சேரவிருந்த டெல்லி இந்து பெண்: என்.ஐ.ஏ.வுக்கு தகவல் கொடுத்த தந்தை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இந்து மதப் பெண் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர திட்டமிட்டிருந்ததை அவரது தந்தை தேசிய புலனாய்வுத் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள பிரபல பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியா சென்று முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முடிவு செய்தார். இதையடுத்து அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் நபரை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அவரின் கம்ப்யூட்டரை பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு தனது மகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து தேசிய புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உளவுத் துறையிடம் இதை தெரிவித்தனர். இதையடுத்து உளவுத் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வது நல்ல விஷயம் அல்ல என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.