பணம் பெறுவதற்காக பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. குழப்பத்தால் அவதி
டெல்லி: இன்று முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெட்ரோல் பங்குகளில் ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்த நிலையில், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுடன் எஸ்.பி.ஐ., வங்கி உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்களில், எஸ்.பி.ஐ., வங்கியின் பாயின்ட் ஆப் சேல் மெஷின் உள்ள 2,500 பெட்ரோல் பங்க்களில் பொதுமக்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளுக்கு 2000 ரூபாய் வரை ரொக்கமாக பெற்று கொள்ளலாம். இந்த அறிவிப்பு நேற்று வெளியானது.
இதனால் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் கால் கடுக்க காத்திருந்த மக்கள், இன்று காலை முதல், பெட்ரோல் பங்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர். வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பெட்ரோல் பங்குகளின் அருகேயுள்ள ஏரியா மக்களும் பெட்ரோல் பங்குகளில் குவிந்துள்ளதால் அங்குள்ள ஊழியர்கள் அவஸ்தைப்படுகிறார்கள்.
எந்தெந்த பெட்ரோல் பங்குகளில் பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படாததால் மக்கள் ஒவ்வொரு பெட்ரோல் பங்காக அலைகிறார்கள். இந்த அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள்.