வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்: வருமான வரித்துறை அதிரடி
வருமானத்திற்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தால் 200 சதவீதம் அளவில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கி கணக்கில் செலுத்தினால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய வருமான வரித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய கடைகளிலும் பண பரிமாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கி கணக்கில் செலுத்தினால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய வருமான வரித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும்.
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் எனவும் வருமான வரித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யும் தொகை வருமானவரி கணக்குடன் ஒப்பீடும் எனவும், வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யும் சிறு வணிகர்கள் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நகைக் கடைகளில் பான் கார்டு பெற்றே நகை விற்பனை செய்ய வேண்டும் எனவும் நகை உரிமையாளர்கள் பான் எண்ணை கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் கூறினார்