ஐபிஎல் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொடுத்த தேஜஸ்வி, இன்று பீகார் துணை முதல்வர்!
பாட்னா: டெல்லி ஐபிஎல் அணி வீரர்களுக்கு குடிநீர் பாட்டில் சப்ளை செய்துகொண்டிருந்த தேஜஸ்வி யாதவ் தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
பீகார் மாநில புதிய அரசு இன்று பதவியேற்றது. முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்க, துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
26 வயதாகும், தேஜஸ்வி டெல்லி, பப்ளிக் ஸ்கூலில் கல்வி பயின்றவர். ஆனால் 9ம் வகுப்பிலேயே, பள்ளியைவிட்டு நின்றுவிட்டு கிரிக்கெட்டை உயிர்மூச்சாக கொண்டார்.
இதன் விளைவாக, டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிக்காக தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், அவருக்கு, 11 பேர் கொண்ட அணியில் இதுவரை ஒருநாள் கூட இடம் கிடைத்தது கிடையாது.
இதை லாலு தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் இப்படி சொல்வார் "பரவாயில்லை, எனது மகன், சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லும் வாய்ப்பாவது கிடைக்கப்பெற்றானே" என்பார்.
ஒருமுறை கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கூலாக இருந்தவர் தேஜஸ்வி. அந்த பக்குவம், துணை முதல்வர் பதவியிலும் தொடரும் என்று பீகார் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேஜஸ்வி மொத்தம் 4 உள்நாட்டு டி20, ஒரு முதல் தர போட்டி, 2 ஏ பிரிவு போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 19. ஸ்பின் பவுலரான அவர் 10 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சாதனை.