குடிக்கவே இல்லை... தமிழகத்தின் பயிர் சாகுபடிக்கு எப்படி தண்ணீர் தருவது? கேட்பது தேவகவுடா
மைசூரு: கர்நாடகா விவசாயிகளுக்கு குடிக்கவே நீர் இல்லாத போது தமிழகத்தின் பயிர் சாகுபடிக்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகா விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேவகவுடா கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு மூன்றுபோகம் பயிர்களை விளைவிக்கின்றனர். ஆனால், கர்நாடகத்தில் ஒருபோக விளைச்சலுக்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.
குடிக்கவே தண்ணி இல்லை..
குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது தமிழ்நாட்டில் சம்பா பயிர் சாகுபடிக்கு எப்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்?
தமிழகத்தில் ஒற்றுமை
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருப்பவர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்று, காவிரி நீர் விவகாரத்தில் மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.
வன்முறை வேண்டாம்
கர்நாடக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்துவது இயல்பானதுதான். ஆனால், சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துகொண்டு யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது.
அமைதியாக போராடனும்
நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் ஒன்றுபட்டு அமைதியான முறையில் போராட வேண்டும். மாறாக, வன்முறை சார்ந்த போராட்டத்தால் நமது சொத்துகள் சேதமாவதைத் தவிர வேறொன்றையும் நம்மால் சாதித்துவிட முடியாது.
இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.