மகாராஷ்டிர பாஜக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிப்பு!
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் பக்தே அறிவித்துள்ளார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயர் 'குரல் வாக்கெடுப்பு' நடத்தியதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 122 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 145.
சிவசேனா 63, காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின. இதனால் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது.
அதே நேரத்தில் பழைய கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் ஆதரவைப் பெற பாஜகவும் முயற்சித்தது. ஆனால் சிவசேனாவோ துணை முதல்வர் பதவி மற்றும் பல முக்கிய இலாக்காக்களை கோரியதால் இழுபறி நீடித்தது.
இந்த நிலையில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக அமைக்கும் முதலாவது அரசாகும்.
இதனைத் தொடர்ந்து பட்நவிஸ் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தின் முதல் நடவடிக்கையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் ஹரிபாபு பக்தே சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சபாநாயகருக்கு அனைத்து கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.
பின்னர் பட்நவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. ஒரு மாநில அரசுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்வதற்காக பொதுவாக வாக்களிப்பு முறைதான் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் மகாராஷ்டிரா சட்டசபையில் சபாநாயகர் பக்தே குரல் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ், சிவசேனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பை நிராகரித்துவிட்டு குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த குரல் வாக்கெடுப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கால்ந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பட்நவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவாண், பாஜக மைனாரிட்டி அரசு தனது பெரும்பான்மையை முறைப்படி சட்டசபையில் நிரூபிக்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்.
இது மகாராஷ்டிரா சட்டசபை வரலாற்றில் கருப்பு நாள். முறையாக பெரும்பான்மையை பாஜக நிரூபிக்கும் வரை சட்டசபையை நடத்த விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதேபோல் சிவசேனாவும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும் பாஜகவை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் சிவசேனா சாடியுள்ளது.
மேலும் பாஜக முறைப்படி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்று ஆளுநரிடம் முறையிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.