பன்சாரே, தாபோல்கர், கல்பர்கி மூவரையும் படுகொலை செய்தது 'சனாதன் சன்ஸ்தா' தீவிரவாதிகள்- திடுக் தகவல்!
மும்பை: சமூக ஆர்வலர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமிர் கெய்க்வாட்டுக்கும், கல்பர்கி, நரேந்திர தாபோல்கர் போன்றோர் கொலையில் சந்தேகிக்கப்படுவோருக்கும் தொடர்புள்ளது அவரது டைரியில் இருந்து தெரியவந்துள்ளது.
கோவாவில் இருந்து இயங்கும், வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர் கெய்க்வாட். இவர், சமூக ஆர்வலர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக கோலாப்பூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் திடுக்கிடும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலுள்ள பலரது தொலைபேசி எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை கர்நாடகாவில் கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கல்பர்கி மற்றும் கொலையான இடதுசாரி சிந்தனையாளர் நரேந்திர தாபோல்கர் ஆகியோர் கொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் எண்கள் என்பது தெரியவந்தது.
எனவே, திட்டமிட்டே சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்கள், எதிர்க்கருத்து பரப்புவோரை கொலை செய்துவந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாபோல்கர் வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. கல்பர்கி மற்றும் கோவிந்த் பன்சாரே வழக்குகளை முறையே, கர்நாடக, மராட்டிய போலீசார் விசாரிக்கிறார்கள். தற்போது வழக்கு மூன்றும் ஒற்றை புள்ளியில் சந்தித்துள்ளதால், தங்களுக்குள் இம்மூன்று விசாரணை அமைப்புகளும், தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.