வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து திக்விஜய்சிங் போட்டி?
டெல்லி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். வதோதராவில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி, காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
ஆனால் வாரணாசியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படவில்லை. அத்தொகுதியில் மோடியை எதிர்த்து பொதுவேட்பாளரை களமிறக்குவது குறித்து காங்கிரஸும் சமாஜ்வாடியும் ஆலோசித்து வருகின்றன.
இதனிடையே மோடியை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் களமிறக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த திக்விஜய்சிங், மோடியை எதிர்த்துப் போட்டியிட நான் தயார்..ஆனால் கட்சி மேலிடம் அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தாம் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்திருக்கிறார். இதனால் திக்விஜய்சிங் போன்ற மூத்த தலைவர்களை களமிறக்குவதுதான் சரியானதாக இருக்கும் என்று காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.