கப்பல் மூலம் கண்டெய்னரில் பணம் கடத்தல்.... வெளிநாட்டு நெட்வொர்க் மூலம் தினகரன் "அசத்தல்"!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் கண்டெய்னர்களில் பணம் கடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்ன பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் குறித்து பல்வேறு ரகசியங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதனை மீண்டும் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் டெல்லி போலீசார் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திஹார் சிறை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு முக்கியமான நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொருவராக சிறைக்கு செல்வதால், அடுத்து என்ன நடக்குமோ என, மன்னார்குடி கோஷ்டியினர் அச்சத்தில் உள்ளனர்.
சர்வதேச நெட்வொர்க்
தினகரன், 1991 முதல் 98 வரை 8 ஆண்டுகள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் வாழ்ந்தார். வெளிநாட்டு குடிமகனான அவருக்கு சர்வ தேச அளவில் நெட்வொர்க் அதிகமாம். அந்த நெட்வொர்க்களை பயன்படுத்தி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார் தினகரன்.
பணம் கடத்தல்
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா உதவியுடன், கடல் வழியாக பல கோடி ரூபாயை கண்டெய்னர்களில் வெளிநாட்டிற்கு கடத்தியதாக தற்போது ரகசிய தகவல் அம்பலமாகியுள்ளது. அது பற்றியும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஹவாலா
சென்னையில் நடைபெற்ற ஐந்து நாள் விசாரணையில் பல்வேறு ரகசிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்போதுதான் ஹவாலா ஏஜென்ட் மூலம், தரகர் சுகேஷ் சந்திராவுக்கு பணம் கொடுத்ததை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆடிட்டர் விசாரணை?
தினகரன் பெயரில் சென்னை 5 எஸ்பிஐ வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தினகரனின் ஆடிட்டரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.