சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: பெங்களூரில் குவியும் அதிமுகவினர்! உஷார் நிலையில் காவல்துறை!!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை கேட்க பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கர்நாடக உள்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தி ஜட்ஜ்மென்ட் டே
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 20ம்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தீர்ப்பு நாளன்று கோர்ட்டுக்கு வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவே எதிர்நோக்கியிருக்கும் தீர்ப்பு என்பதால் பெங்களூரில் இப்போதிருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

நீதிபதி ஆலோசனை
ஜெயலலிதா வர உள்ளதால், தீர்ப்பு நாளன்று அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் பெங்களூரில் திரளுகிறார்கள். இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆஜராக வரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து நீதிபதி குன்ஹா, கர்நாடக உள்துறை மற்றும் காவல்துறையினரிடம் கலந்தாலோசனை செய்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் திரள வாய்ப்பு
பெங்களூர் வரும் ஜெயலலிதாவை பார்க்கவும், அவருக்கு பக்கபலமாக இருக்கவும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பெங்களூர் வர வாய்ப்புள்ளதாக கர்நாடக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கொண்டாட்டமா, திண்டாட்டமா?
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், எதிராக தீர்ப்பு வந்தால் வன்முறையில் ஈடுபடவும் தொண்டர்கள் தயங்கமாட்டார்கள் என்று கூறியுள்ளது கர்நாடக உளவுத்துறை. இந்த தகவலை நீதிபதியிடம் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தசரா பாதுகாப்பு
இது முக்கியமான வழக்கின் தீர்ப்பு என்பதால் கோர்ட் வளாகமும், பெங்களூர் நகரமும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தசரா விழாவையொட்டி 20ம்தேதிக்கு பிறகு காவல்துறைக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் தீர்ப்பை ஒத்திப்போட்டால் கர்நாடக காவல்துறை முழு ஒத்துழைப்பை அளிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விடுதிகளில் மளமள புக்கிங்
இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படியே, பெங்களூரில் அதிமுகவினர் குவிய உள்ளது ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்படும் வேகத்தை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. தீர்ப்பு வரும் நாளில் பெங்களூரில் தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என 50 ஆயிரம் பேர் திரள இருக்கிறார்கள் என்று தெரிகிறது. வருபவர்கள் தங்குவதற்காக இப்போதே பெங்களூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் புக் செய்யப்பட்டுள்ளன.

பக்கத்து நகரங்களிலும் புக்கிங்
எனவே வரும் 18ம்தேதி முதல் 20ம்தேதிவரையில் பெங்களூரின் பெரும்பாலான ஹோட்டல்களில் ரூம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ரூம் கிடைக்காத அதிமுகவினர் அண்டை நகரங்களான ஒசூர், கோலார், ராம்நகர், மண்டியா, தங்கவயல், தும்கூர் போன்ற பகுதிகளிலுள்ள ஹோட்டல்களிலும் அறைகளை புக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இடம் மாறுகிறதா கோர்ட்?
இதனிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் நகருக்கு வெளியே உள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் சிறப்பு நீதிமன்றத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய, நீதிபதிக்கு, காவல்துறை யோசனை தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா நேரில் ஆஜராக வந்தபோதும், இதேபகுதிக்கு கோர்ட் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications