'அம்மா'வை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவிதான் ஆயுதம்... பாஜகவிடம் விஜயகாந்த் கோரிக்கை
டெல்லி: தமிழகத்தில் ஆளும் கட்சியின் நெருக்கடியை எதிர்கொள்ள மத்தியில் அமைச்சர் பதவி கிடைத்தால் ஆயுதமாக இருக்கும் என்று பாரதிய ஜனதாவிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிட்டன. பின்னர் தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருவாக அதிமுக ஆதரவு அணியாக மாறினர். அத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் என பலரது மீதும் வழக்குகள் பாய்ந்தன.
தேமுதிக படுதோல்வி
தற்போது லோக்சபா தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. அதன் வாக்கு சதவீதம் சரிபாதியாக குறைந்துபோய்விட்டது.
அதிமுக பலம்
அதிமுக 37 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
தொடரும் தாவல்கள்
அடுத்த 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மேலும் பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக அணிக்கு தாவுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.
எதிர்க்கட்சித் தலைவர்?
இதனால் தமது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் பறிபோகிவிடும் நிலை இருக்கிறது.
ஆயுதம்தான் அமைச்சர் பதவி
இதையெல்லாம் பாரதிய ஜனதாவின் மேலிடத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், இத்தகைய நெருக்கடியான நிலைமையில் எங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆயுதமாக மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும்.
ராஜ்யசபா சீட்
சுதீஷை ராஜ்யசபா எம்.பி.யாக்கி அமைச்சராக்கிவிட்டால் ஓரளவு சமாளித்துவிடலாம்.
எல்லாமே சட்டசபை தேர்தலுக்குத்தான்...
அப்போதுதான் 2016 சட்டசபை தேர்தலை நாம் வலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்றும் கேட்டிருக்கிறார். இதை கவனமாகக் கேட்டுக் கொண்ட பாஜக மேலிடத் தலைவர்களும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவை சொல்லுகிறோம் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்.
மோடி உச்சிமோர்ந்து பாராட்டு
இந்த நிலையில்தான் நேற்றைய நாடாளுமன்ற வளாககக் கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்தையும் அவரது மனைவியையும் வெகுவாக நரேந்திர மோடி புகழ்ந்தார்.
எல்லாம் 2-016க்குத்தான்..
சட்டசபை தேர்தலிலும் தேமுதிக கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு யுக்தி என்றும் கூறப்படுகிறது. அத்துடன் மோடியின் பாராட்டு, அரவணைப்பு எல்லாமே தேமுதிகவின் கனவான ஒரு ராஜ்யசபா சீட், ஒரு அமைச்சர் பதவி என்கிற ஆயுதத்தைக் கொடுக்கும் நம்பிக்கையையும் விதைத்துள்ளதாக நம்புகின்றனர் தேமுதிக தலைவர்கள்.