மோடியை முஸ்லிம்கள் கை விட்டு விட வேண்டாம்: சிவசேனா
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை முஸ்லிம்கள் கைவிட்டு விட வேண்டாம் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், முஸ்லிம் சமுதாயத்தினரின் தேசப்பற்று மற்றும் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பு ஆகியவற்றை குறித்து பேட்டி ஒன்றில் உயர்வாக பேசிய நரேந்திர மோடியை முஸ்லிம் சமுதாயத்தினர் கை விட்டு விட கூடாது என தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், இந்துத்துவா கொள்கையில் இருந்து அவர் நீர்த்து போய் விட்டதாக பொருள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பில்லை
மேலும் நாடு, அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு நரேந்திர மோடி பிரதமர். ஆனால், அவர் மீது முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அதற்கு பொறுப்பாக முடியாது என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்தாக்கரே போல..
சிவசேனாவின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரே கடுமையான ஆனால் நல்ல இந்துத்வா கொள்கையில் ஈடுபட்டிருந்ததை அது நினைவுபடுத்தி உள்ளது.
எதற்கு எதிர்ப்பு
பால் தாக்கரே, தான் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை எப்பொழுதும் கூறியவர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை கொண்டாடியவர்களை தான் அவர் எப்பொழுதும் எதிர்த்தார். அத்தகைய முஸ்லிம்களை தான் அவர் துரோகிகள் என கூறினார்.
சந்தேகப்பட முடியாது
இல்லையெனில், நாட்டின் முஸ்லிம்கள் மீது அவர் உயரிய மரியாதை வைத்திருந்தார். இந்திய முஸ்லிம்கள் தங்களது நாட்டிற்காக வாழ்ந்து, தங்கள் நாட்டிற்காக மறைபவர்கள். அவர்கள் அல்-கொய்தா போன்ற தீவிரவாத குழுக்களுக்கு துணை போக மாட்டார்கள். எனவே, அவர்களது தேசத்தின் மீதான நம்பிக்கை மீது சந்தேகப்பட முடியாது என்று மோடி தெரிவித்துள்ளதையும் தலையங்கம் சுட்டி காட்டியுள்ளது.