"நேஷனல் பார்ட்டி"யில் இருந்துட்டு இந்தியை எதிர்க்கலாமா?.... தமிழக பாஜகவுக்கு சாமி கேள்வி
டெல்லி: தேசிய கட்சியின் ஒரு மாநிலப் பிரிவாக இருந்து கொண்டே அகில இந்திய வானொலியில் இந்தி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என தமிழக பாஜகவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி.
சமீபத்தில் அகில இந்திய வானொலியில் தினமும் நான்கு மணி நேரம் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தமிழக கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்தி திணிப்பு செயல் இது என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
How can a state unit of national party oppose Hindi broadcast on AIR as an optional language to learn? Don't like it then go to new channel
— Subramanian Swamy (@Swamy39) October 28, 2014
அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப் படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாக தமிழக பாஜக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில், தேசிய கட்சியின் ஒரு மாநிலப் பிரிவாக இருந்து கொண்டு தமிழக பாஜகவினர் இவ்வாறு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்கு பாஜக கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த இந்தி நிகழ்ச்சியைக் கேட்க விரும்பாதவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ளுங்கள் என அவர் அறிவுரை அளித்துள்ளார்.