சச்சின் பைலட் பாஜகவில் இணைகிறாரா?.. பாஜக தலைவர் பேச்சால் ராஜஸ்தானில் பரபரப்பு!
ஜெய்பூர்: ராஜஸ்தானில், செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா, 'காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பாஜகவில் இணைய விரும்பினால், அவருக்கு பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக' கூறினார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தினர். காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதில் ராகுல் காந்தி விடாப்படியாய் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரான அசோக் கெலாட் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். சசி தரூரும் போட்டியிடுவதற்காக மனுவை வாங்கியிருக்கிறார்.
அசோக் கெலாட் போட்டி
'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியதன் படி, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டது. சச்சின் பைலைட்டை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. ஆனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சுமார் 82 பேர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கலகக்குரல் எழுப்பியுள்ளனர். இதனால், ராஜஸ்தான் காங்கிரசில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் திட்டம்
எம்.எல்.ஏக்களின் இந்த எதிர்ப்புக்கு பின்னணியில் அஷோக் கெலாட் இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் நிறுத்தப்படாமல் வேறு சில மூத்த தலைவர்களை நிறுத்துவது குறித்தும் தலைமை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில், குளம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக, ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ராஜினாமா செய்வதாக இருந்தால்
அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் சத்தீஷ் பூனியாவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோரும் சபாநாயகர் சி.பி. ஜோஷியைச் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஷ் பூனியா, சச்சின் பைலட் பாஜகவில் இணைய விரும்பினால், அவருக்கு கட்சியின் கதவுகள் திறந்தே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய தலைமை முடிவு எடுக்கும்
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம் என்றும் இதில் தங்கள் பங்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். அதேபோல், பாஜக செய்தி தொடர்பாளர் ஆர்பி சிங் கூறுகையில், ''அதுபோன்ற ஒரு சூழல் (சச்சின் பைலட் பாஜகவில் இணைந்தால்) ஏற்பட்டால் மத்திய தலைமை முடிவு எடுக்கும்'' என்றார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், காங்கிரஸ் கட்சி 108 உறுப்பினர்களையும், பாஜக 71 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.