இந்திய பாதுகாப்பு அமைப்பின் 'பன்சி' இலகு ரக விமான சோதனை வெற்றி
பெங்களூரு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பன்சி எனப்படும் தனது புதிய வகை இலகு ரக விமானத்தை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
ஏற்கனவே சோதித்து பார்த்த நிசாந்த் எனப்படும் ஆளில்லாத விமானத்தின் சக்கரம் வைத்த மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்த பன்சி ஆகும். இந்த சோதனை சுமார் 20 நிமிடங்கள் நடத்தப்பட்டது. கோலார் டிஆர்டிஓ சோதனை மையத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.

விமான மேம்பாட்டு அமைப்பான ஏடிஇ, பெங்களூருவிலுள்ள மையத்தில், இந்த விமானத்தை உருவாக்கியுள்ளது. பன்சி ரக விமானத்தால் குறுகிய ஓடுதளங்களிலும் ஓடி விண்ணில் பறக்க முடியும். ரேடார்களையும் ஏமாற்றி பறக்குமளவுக்கு அதன் உருவம் குறுகியதாக உள்ளது.

டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல் (விமானப்பிரிவு சிஸ்டம்) டாக்டர். தமிழ்மணி இதுகுறித்து கூறுகையில், பன்சி விமான சோதனை வெற்றி பெற கூட்டு முயற்சி காரணம். கடந்த 8 மாதங்களாக இதுபோன்ற விமானத்தை தயாரிக்க மிக தீவிரமான முயற்சியில் இறங்கிய அதிகாரிகள் பாராட்டுபெறத்தக்கவர்கள். நிசாந்த்தை விட பன்சி அதிகப்படியான நேரம் விண்ணில் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டது. நிசாந்த் வகை விமானத்தை மண்ணில் இறக்க பாரசூட், ஏர்பேக் போன்ற வசதிகள் தேவை. பன்சிக்கு அதெல்லாம் தேவை கிடையாது" என்றார்.

நிசாந்த் விமானத்திலுள்ள அனைத்துவகையான கண்காணிப்பு வசதிகளும் பன்சியிலும் உள்ளது. இருப்பினும் அதைவிட கூடுதல் வசதிகள் இதில் இருப்பதுதான் சிறப்பு. கோலாரில் நடந்த சோதனையின்போது பன்சி மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்ததாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.












Click it and Unblock the Notifications