டெல்லியில் மது போதையில் காரை தறிகெட்டு ஓட்டிய கல்லூரி மாணவன்... நடந்து சென்ற இருவர் பரிதாப பலி
டெல்லி: டெல்லியில் மதுபோதையில் கல்லூரி மாணவன் மிகவேகமாக காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பரிதாபமாக பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் ஜானக்புரி பகுதியில் ரிஷாப் ராவத் (வயது 21) என்னும் கல்லூரி மாணவர் நேற்று அதிகாலை தனது நண்பரின் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அதிகமாக குடித்திருந்த ரிஷாப் காரை 100 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சாலையில் நடைபயிற்சிக்காக வந்த காமேஷ்வர் பிரசாத் (40) என்பவர் மீது மின்னல் வேகத்தில் கார் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட காமேஷ்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சந்தோஷ் என்பவர் மீதும் கார் மோதியது. பின்னர் அஷ்வனி ஆனந்த்(67) என்பரின் மீதும் அடுத்தடுத்து மோதியது.
இதில் ஆனந்த் மற்றும் காமேஷ்வர் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சந்தோஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள இந்த சம்பவத்தில், ரிஷாப் ராவத் மிக அதிக வேகத்தில் செல்வதும், தவறாக சாலையில் செல்வதும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாக சென்றதையடுத்து போலீசார் துரத்தி பிடித்தனர். அப்போது ரிஷாப் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ரிஷாப் சிறையில் அடைக்கப்பட்டார்.