பீகாரில் பரிதாபம்... தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலி!
பாட்னா: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று இரவு நடைபெற்ற தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று மாலை தசரா பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.
நெரிசலில் 32 பேர் பலி
நிகழ்ச்சியின் முடிவாக, அங்கிருந்த 60 அடி உயர ராவணன் உருவ பொம்மைக்கு தீவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து பொது மக்கள் வெளியேறியபோது பெரும் கூட்ட நெரிசல் நேரிட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
15 பேர் படுகாயம்
மேலும் 15 பேர் காயமடைந்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாட்னா மாவட்ட ஆட்சியர் மணீஷ் குமார் வர்மா தெரிவிக்கையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரில் 20 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள் என்றார்.
முதல்வரும் பங்கேற்பு
தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியும் கலந்து கொண்டிருந்தார். அப்போது இந்த துயரச் சம்பவம் நேரிட்டுள்ளது.
வதந்தியால் நெரிசல்
தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடையே, மின்சார ஒயர் அறுந்து விழுந்து விட்டதாக வதந்தி பரவியதால், மக்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்து விட்டதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர்.
பிரதமர் இரங்கல்- நிதி உதவி அறிவிப்பு
கூட்ட நெரிசல் குறித்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அந்த துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சோனியாவும் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.