டெல்லி பல்கலை. தேர்தலில் பாஜக மாணவர் அமைப்புக்கு பலத்த அடி! தலைவர், துணை தலைவர் பதவிகளை வென்ற காங்.
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக தேர்தலில் பாஜக மாணவர் அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் மாணவர் அமைப்பு, தலைவர் துணை தலைவர் பதவிகளை தட்டிச் சென்றுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் அமைப்புகளின் தேர்தல்கள் எப்போதுமே தேசிய அளவில் கவனம் ஈர்ப்பவையாகும்.
தங்கள் செல்வாக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்ய இவ்வகை தேர்தல்கள் உதவும். அதிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சி பின்புலம் கொண்ட மாணவர் அமைப்புகள் நடுவேதான் நேரடி மோதல் இருக்கும்.

ஏபிவிபிக்கு பின்னடைவு
இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் முடிந்து, அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி முன்னணியில் இருந்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு அந்த அமைப்பு பின்னடைவை சந்தித்தது.

தலைவர், துணை தலைவர்
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய இரு பதவிகளை வென்றது. செயலாளர் பதவியை மற்றும் இணை செயலாளர் பதவிகளை ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர்.

திடீர் எழுச்சி
2007ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற என்.எஸ்.யு.ஐ அதன்பிறகு சரிவையே சந்தித்து வந்தது. 2012ல் 3 இடங்களை கைப்பற்றியது. பின்னர், இப்போது குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளது.

ஜே.என்.யூவிலும் அடி
இரு தினங்களுக்கு முன்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஒட்டு மொத்த இடங்களையும் இடதுசாரி மானவர்கள் கூட்டமைப்பு வென்றது. இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்திலும் பாஜக மாணவர் அமைப்புக்கு அடி கிடைத்துள்ளது. அடுத்தடுத்து மாணவர்கள் மத்தியில் பாஜக ஆதரவு அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவது அக்கட்சி தலைமையை கவலையடையச் செய்துள்ளது.

மறுவாக்கு எண்ணிக்கை
இதனிடையே, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று ஏ.பி.வி.பி தரப்பு கோரிக்கைவிடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளது. மத்திய மனிதவளத்துறை மூலம், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளை அரங்கேற்ற இக்கோரிக்கைவிடுக்கப்படுவதாக இந்திய தேசிய மாணவர் சங்கம், சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications