ஆந்திராவில் ஏப்-30, மே-7ல் சட்டமன்ற தேர்தல்-ஒடிஷா, சிக்கிம் சட்டசபைகளுக்கும் தேதி அறிவிப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் சம்பத், நாடு முழுவதும் 9 கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.
அத்துடன் ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஆந்திர மாநில சட்டசபை பதவி காலம் மே 30, ஒடிஷா சட்டசபை பதவிக் காலம் ஜூன் 29, சிக்கிம் சட்டசபை பதவிக் காலம் மே 23-ந் தேதி முடிவடைகிறது. இதனால் லோக்சபா தேர்தலுடன் இம்மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.
ஆந்திராவில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 2-ந் தேதி தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது பின்னர் அதன் கீழ் வரும் மாவட்டங்களின் அடிப்படையில் சட்டசபை தொகுதிகள் பிரித்து வரையறை செய்யப்படும்.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 10 மற்றும் 17-ந் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். 32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இவ்வாறு தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.