சசியின் அதிமுக உறுப்பினர் அட்டையை முன்வைத்து புதிய பஞ்சாயத்து- காத்திருக்கும் மரண அடி!
சசிகலா முதலில் அதிமுக அடிப்படை உறுப்பினர்தானா? அதில் உள்ளது ஜெயலலிதாவின் கையெழுத்தா? என்கிற சசிகலா புஷ்பாவின் மனு மீதும் வரும் 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி: சசிகலாவின் அதிமுக உறுப்பினர் அட்டையை முன்வைத்து தேர்தல் ஆணையத்தில் புதிய பஞ்சாயத்து நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக சசிகலா கோஷ்டியின் பிடியில் இருந்து அதிமுக விடுதலையாகுமா என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா, பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற வாதத்தை நிரூபிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சர்ச்சையில் சசிகலா வெற்றி பெறும் நிலையில்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
இது தொடர்பான விசாரணை வரும் 17-ந் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் இரட்டை இலை தொடர்பான வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 8 வார கால அவகாசத்தை கோரியிருக்கிறது சசிகலா தரப்பு.

அவகாசத்துக்கு காரணம்...
அதிமுக(அம்மா) கட்சி மேலிடம் அனுப்பியுள்ள படிவங்களில் அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கையெழுத்து போட தயங்கி வருகிறார்களாம். இதில் பலர் பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம். இதனால்தான் 8 வார கால அவகாசம் கோரப்பட்டதாம்.

மோசடி கையெழுத்து
இதனிடையே சசிகலா புஷ்பா தரப்பு வரும் 17-ந் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் புதிய பஞ்சாயத்தை முன்வைக்க உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே அவரது கையெழுத்தை யாரும் மோசடியாக பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும் என ஒரு மனுவை கொடுத்து வைத்திருந்தார்.

சசிகலா கட்சி உறுப்பினரா?
அதாவது 2012-ம் ஆண்டு சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். ஆனால் அவரை அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா அறிவிக்கவில்லை. அப்போது நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திலும் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக மட்டுமே சசிகலா கலந்து கொண்டார்.

பொய்யான உறுப்பினர் அட்டை
ஆக அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது சசிகலா; ஒருவேளை தாம் அடிப்படை உறுப்பினர் என ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சசிகலா காட்டினால் அதில் உள்ள ஜெயலலிதாவின் கையெழுத்தின் உண்மைதன்மை குறித்து விசாரிக்க வேண்டும்; அப்போது சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தி இருந்தார்.

விரைவில் அதிமுகவுக்கு விடுதலை
இந்த மனுமீது முதலில் விசாரணை நடத்த வேண்டும் என சசிகலா புஷ்பா தரப்பு வலியுறுத்த உள்ளதாம். சசிகலா பொதுச்செயலர், இரட்டை இலை சின்னம் என்பதைவிட அவர் முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்கிற தங்களது வாதம்தான் வெல்லும்; அதனால் ஒட்டுமொத்தமாக சசிகலா கோஷ்டியிடம் இருந்து அதிமுக விடுதலை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறதாம் ஓபிஎஸ் ப்ளஸ் சசிகலா புஷ்பா தரப்பு.












Click it and Unblock the Notifications