நோட்டாவிற்கு தனி அடையாளம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை குறிக்கும் வகையிலான 'நோட்டா' தேர்வை மக்கள் எளிதாக தெரிந்துகொள்ள தனி அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற தேர்வை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த தேர்வு அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் பொருட்டு ஒரு அடையாளம் உருவாக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நோட்டா என்பதை குறிக்கும் N-O-T- A ஆங்கில எழுத்துகள் கருப்பு செவ்வகத்தில் வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கப்படும் வாக்குச் சீட்டில், வேட்பாளர்கள் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும்.
அந்த வரிசையில் "மேற்காணும் நபர்களில் எவருமில்லை" என்பது கடைசி தேர்வாக இருக்கும். அந்த சொற்களுக்கு அருகிலேயே இந்த நோட்டா அடையாளம் அச்சிடப்பட்டிருக்கும்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் இந்த நோட்டா அடையாளத்திற்கு நேராக இருக்கும் பொத்தானை அழுத்தலாம். எனவே, தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு சென்று நோட்டா சின்னத்தில் வாக்களிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.