ஷாக்... விழுப்புரம் வரை வந்து சொத்துக்களைக் குவித்த வங்கிக் கொள்ளையன் நீரவ் மோடி கூட்டாளி சோக்ஸி!
நீரவ் மோடியின் கூட்டாளி மெஹூல் சோக்ஸின் ரூ1217 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம்/மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடியின் கூட்டாளி மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான விழுப்புரம் நிலம் உட்பட ரூ1,217 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸியை கைது செய்ய அத்தனை முயற்சிகளையும் அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நீரவ் மோடியின் கூட்டாளி மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான ரூ.1,217 கோடி சொத்துகளை அதிரடியாக முடக்கியிருக்கிறது அமலாக்கப் பிரிவு. மும்பையில் 15 வீடுகள், 17 வணிக வளாகங்கள், கொல்கத்தா வணிக வளாகம், ஹைதராபாத்தில் ரூ500 கோடி மதிப்பிலான 170 ஏக்கர் நிலம், தமிழகத்தின் விழுப்புரம், மகாராஷ்டிராவின் நாசிக், நாக்பூர் நிலங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மெஹூல் சோக்ஸியின் மொத்தம் 41 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் நீரவ் மோடியின் ரூ523 கோடி மதிப்பிலான 21 சொத்துகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.