இமாச்சல பிரதேசத்தில் நவ.9ல் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றுதலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இன்ற அறிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் சட்டசபை தேர்தல் தேதியை இன்று மத்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
டெல்லியில் மாலை நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அக்.16, மனுதாக்கல் தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள், அக்.23. வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள் அக்.24. வேட்பு மனு திரும்பப்பெற கடைசி நாள் அக்.26.
தேர்தலையொட்டி இமாச்சல பிரதேசத்தில், 7521 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஜனவரியில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள குஜராத்துக்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளோம்.
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாநில காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்
இமாச்சலப் பிரதேசத்தில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம். குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றும் வாக்குச்சாவடிகளும் இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் 136 வாக்குச்சாவடிகளிலும் பெண்கள் பணியாற்றும் வகையில் அமைக்கப்படும்
தேர்தல் ஆலோசனைகள் பெற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படும்; வேட்பு மனுதாக்கல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.