நந்திகிராம் தொகுதி... மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது... மமதா கோரிக்கை நிராகரிப்பு..!
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துவிட்டது தேர்தல் ஆணையம்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1,736 வாக்குகள் கூடுதலாக பெற்று மமதாவை வீழ்த்தினார்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதலே நந்திகிராம் தொகுதியில் மமதாவுக்கு கடும் போட்டியாக திகழ்ந்து வந்தார் சுவேந்து அதிகாரி. இதனிடையே எப்படியும் மமதா இறுதியில் வெற்றிவாகை சூடுவார் எனக் கருதிய திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அந்த தொகுதியின் முடிவு கடும் ஏமாற்றத்தை அளித்தது.
இது தொடர்பாக குற்றஞ்சாட்டியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், ''மாநிலத்தில் நான்கில் மூன்று என்ற வீதத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். அப்படியிருக்கும் போது நந்திகிராம் தொகுதியில் மமதா தோற்கிறார் என்றால் அங்கு முறைகேடு அரங்கேறியிருப்பது தெரியவருகிறது'' எனக் கூறியுள்ளார்.
இதனிடையே நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் தனது கோரிக்கையை ஏற்று அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்
ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரியோ, வாக்கு எண்ணிக்கை மிகச் சரியாக நடைபெற்றது என்றும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துவிட்டார். தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு செல்லும் முடிவில் இருக்கிறார் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 210-க்கும் அதிகமான இடங்களை கைபற்றி அபார வெற்றி பெற்றிருக்கிறது திரிணாமூல் காங்கிரஸ்.