இப்படி ஒரு தேர்தல் ஆணையம் தேவையா?
இந்தியா என்கிற தேசம் மதசார்பற்ற கொள்கைகளைப் பின்பற்றவும், தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இன்றளவும் பேணிக் காக்கப்படுவதற்கும் காரணகர்த்தாவாக இருப்பது இந்திய தேசிய காங்கிரஸ் என்பதை இந்திய அரசியல்வாதிகளால், பொதுமக்களால் மறுக்க முடியாது.
இந்த கொள்கைகளுக்கு எதிராக இந்திரா காந்தி தலைமையில் செயல்பட்டு வந்த இந்திய அரசாங்கம் நடக்க முற்பட்ட காலங்களில் எல்லாம் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தி மக்கள் ஜனநாயகத்தை காத்து, வலிமைப்படுத்தியவர்கள் இந்திய இடதுசாரி கட்சிகளும், தென் இந்தியாவில் இருந்த திராவிட இயக்கங்களும்தான். அதன் வழித்தோன்றல்களாக உருவெடுத்து , பல்வேறு மாநிலங்களில் 1977க்கு பின் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது வரலாறு.
மாநில கட்சிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது காங்கிரஸ் கட்சி கொள்கையாக இருந்தது. மாநில கட்சிகளை முடக்கி அழிக்கும் முயற்சியை மோடி தலைமையிலான, பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு நீட்சியாக தமிழகத்தில் அஇஅதிமுக கட்சி முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத வாதம் தலைதூக்கும் காலங்களில் அதற்கு எதிராக உரத்து குரல் கொடுப்பவர்களாக திரவிட இயக்கங்களே இருந்துள்ளன. அதே போன்று மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசுகள் செயல்படத் தொடங்குகிறபோதே அதற்கு எதிராக மாநில கட்சிகளை, அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து மாநில உரிமைகள் காக்கப்பட மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற போர் முழக்கத்தை தொடங்கி வைத்ததும் தமிழக திராவிட இயக்கங்களே.
இவற்றுக்கு முடிவு கட்டிவிட்டால் இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி, மதவாத ஆட்சியை கொண்டு வந்து விடலாம் என்ற பிஜேபியின் தொலைநோக்குத் திட்டத்தை கருணாநிதி, ஜெயலலிதா என்கிற அரசியல் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்தவரை அமுல்படுத்த முடியவில்லை. இந்த ஆளுமைகள் தற்போது தமிழக அரசியலில் இல்லை. அதன் வெளிப்பாடே சட்டத்துக்கு புறம்பாக, ஜனநாயக விரோதமாக மோடியின் கைக்கூலியாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு, இந்தியாவில் மிகப் பெரும் மாநில கட்சியாக செயல்பட்டு வந்த அஇஅதிமுக கட்சி பெயரை கொடியை அந்த கட்சியினரே பயன்படுத்த கூடாது என்கிற கொலைகார முடிவை நேற்றுமுன்தினம் நள்ளிரவு அறிவித்துள்ளது.
அதிமுகவுக்குள் அதிகார போட்டியை பன்னீர்செல்வம் மூலம் தூண்டி விட்டு கலகத்தை தொடங்கி வைத்தது மோடி ஆட்சி. ஏற்படப் போகும் விபரீதத்தை உணராமல் பிஜேபியின், பகடையாக ஆட்டத்தை தொடங்கி கட்சியை உடைத்த பன்னீரை ஒரு கட்டத்தில் கை கழுவியது மோடி அரசு. எடப்பாடி அரியணை ஏற அனுமதித்து, பிஜேபிக்கு எதிரான நிலைபாட்டை மக்கள் செல்வாக்கு உள்ள பன்னீரையும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ள எடப்பாடி தரப்பையும் , தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பிஜேபி. தமிழகஅரசு நிர்வாகத்தை தேர்தலில் வெற்றி பெறாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிஜேபி, இரு தரப்புக்கும் சாதகமாக நடந்து கொள்வதை போன்று தன் நடவடிக்கையை காட்டிக் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அஇஅதிமுக என்கிற மாபெரும் கட்சியை சின்னா பின்னப்படுத்தும் முயற்சியின் தொடக்கமே, கட்சி சின்னம் சம்பந்தமாக எழுந்த புகாரில் விசாரணை நடத்துகிறேன் பேர்வழி என கூறி முடிவில் கட்சி பெயரை இரு தரப்பும் பயன்படுத்த தடை விதிக்க வைத்துள்ளது.
விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு அல்லது முடக்கி வைக்கிறோம் என்கிற அளவில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும். விசாரணை முடிவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவில் "ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை. அதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை, கட்சி பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கிறோம்," என அறிவித்திருக்கிறது.
சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியாவில் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை என அறிவிக்க தேர்தல் ஆணையம் தேவையா என்கிற கேள்வி எழுகிறது. தமிழக மக்களால் தங்களை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, எந்தக் கட்சி என்பதை கூற முடியாத தலைக்குனிவை பிஜேபி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.
இது அதிமுக என்கிற கட்சிக்கு ஏற்பட்ட அவமானம், பின்னடைவாகக் கருதக் கூடாது மாநில கட்சிகளை அழிக்க மோடி அரசு எடுத்திருக்கும் கொடுர ஆயுதமாக கருத வேண்டி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இம்முடிவை மாநில அரசியல் கட்சிகள் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும் என்றே ஜனநாயகத்தை விரும்புவோரின் விருப்பமாக உள்ளது.
-ராமானுஜம்