பிரஸ்மீட்டில் எம்.எல்.ஏ. கைது- டெல்லியில் 'எமர்ஜென்சி'யை பிரகடனம் செய்த மோடி... கேஜ்ரிவால் காட்டம்
டெல்லி: பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து கொண்டிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானி போலீசார் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் அவசரநிலையை பிரதமர் மோடி பிரகடனம் செய்துள்ளதாக சாடியுள்ளார்.
டெல்லி சங்கம் விகார் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா. இவரது அலுவலகத்துக்கு சங்கம் விகார் தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்று குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்று புகார் மனு கொடுக்க சென்றார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், தினேஷ் மொகானியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தினேஷ் மொகானியாவும், அவரது ஆதரவாளர்களும் பெண்ணை பிடித்து வெளியே தள்ளினார்கள்.
Modi declares emergency in Delhi. Arresting, raiding, terrorizing, filing false cases against all those whom Delhi elected
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 25, 2016
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெப் சாராய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் தம் மீதான புகார்கள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று தினேஷ் மொகானியா விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தா போலீசார் செய்தியாளர் சந்திப்பை தடுத்து நிறுத்தி தினேஷ் மொகானியாவை கைது செய்தனர்.
இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கைது குறித்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவால், எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியாவை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனைத்து டிவி சேனல்கள் முன்னிலையில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்; டெல்லியில் பிரதமர் மோடி, அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக கைது, ரெய்டு, அச்சுறுத்தல், பொய் வழக்குகள் போடுதல் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சாடியுள்ளார்.