டெல்லி மதக்கலவரத்துக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் குமார் வைத் காரணம்?
டெல்லி: கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் கடந்த 5 நாட்களாக நீடித்து வரும் வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுனில்குமார் வைத்தான் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி நாளில் நள்ளிரவில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இதைக் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மறுநாள் காலையில் இது பெரும் வன்முறையாக வெடித்தது.
இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் கற்களை சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், இரு பிரிவினரிடையே அமைதி ஏற்படுத்த முயன்றனர்.
அப்போது நடைபெற்ற மோதலில் 20 போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதலின்போது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறை கடந்த 4 நாட்களாக நீடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி பாதுகாப்புப் படையினர் கண்காணித்தனர்.
இதில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நேற்று 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது. இதனிடையே இந்த மோதலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுனில்குமார் வைத் காரணம் என்று கூறப்படுவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலுக்கு முன்பா சுனில்குமார் வைத் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் சுனில்குமார் வைத்யா, அரசியல் ஆதாயத்துக்காக இந்த மோதலை தூண்டிவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த சுனில்குமார் வைத், கடந்த சட்டசபை தேர்தலில் திரிலோக்புரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.