மாயாவதியை நாயுடன் ஒப்பிட்டு மீண்டும் தயாசங்கர் சிங் அநாகரிக விமர்சனம் #mayawati
லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியை மீண்டும் தரக்குறைவாக பேசிவிட்டு, பின்பு அதனை மறுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி எம்பி அம்மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில், அவரை ஒரு பெண் தலைவர் என்றும் பாராமல் மிக மோசமாகவும் ஆபாசமாகவும் மாநிலங்கள் அவையிலேயே உத்தரபிரதேசத்தின் பாஜக முன்னாள் தலைவர் தயாசங்கர் சிங்.
அவதூறு பேச்சு
உத்தர பிரதேச பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் மாநிலங்களவையில் ‘‘சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாயாவதி ஒரு தொகுதிக்கான இடத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்கிறார். 2 கோடி ரூபாய் கொடுத்தால் சீட் அவருக்கு மாறிவிடும். மாலையில் யாராவது 3 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தால் முதலில் நியமிக்கப்பட்ட வேட்பாளரை நீக்கிவிட்டு, புதியவரை தேர்வு செய்கிறார். அவரது குணம் மிகவும் மோசமாக உள்ளது'' என ஆபாசமான வார்த்தைகளை சொல்லிச் பேசினார்.
எதிர்த்து குரல்
‘‘தரம்தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய தயாசங்கர் சிங்கை உடனடியாக கட்சியை விட்டு நீக்கி கைது செய்ய வேண்டும்'' என்று மாயாவதி மாநிலங்களவையிலேயே எதிர்த்து குரல் கொடுத்தார்.
தயாசிங் நீக்கம்
தயாசங்கர் சிங்கின் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாகியது. உத்திரபிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்தும் மற்றும் 6 வருடங்கள் கட்சியில் இருந்தும் தயாசங்கர் சிங்கை நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. மேலும், அவரின் இந்தக் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
கைது
எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தயாசங்கர் சிங் மீது உ.பி., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 153ஏ, 504 மற்றும் 509 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தயாசங்கர் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலையானார்.
மீண்டும் சர்ச்சை பேச்சு
இந்நிலையில், ஜாமீனில் வெளி வந்த தயாசங்கர் சிங், மைன்புரியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மீண்டும் மாயாவதியை தரக் குறைவாக பேசியுள்ளார். "மாயாவதி பேராசை பிடித்தவர். அவருடைய சகோதரர் மற்றும் அரசியல் ஆலோசகர் சதீஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சந்தேகத்திற்கிடமான முறையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். சந்துகளில் மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றால் அதை துரத்தும் நாய், மோட்டார் சைக்கிள் நின்று விட்டால் பின்வாங்கி விடுவது போல் மாயாவதியின் செயல்பாடு இருக்கிறது" என்று பேசியுள்ளார்.
தயாசங்கரின் இந்தப் பேச்சு மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், தான் அப்படி பேசவில்லை என்று மறுத்து தெரிவித்துள்ளார்.