பீகாரில் பழுக்காத லிச்சி பழங்களைச் சாப்பிட்ட 50 குழந்தைகள் பலி... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
கொல்கத்தா: பீகாரில் பழுக்காத லிச்சி பழங்களைச் சாப்பிட்டதால் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, சுமார் 50க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக பீகார் குழந்தைகளுக்கு மர்ம நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இதில் பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முசாபர்பூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஐந்து குழந்தைகள் இறந்து போயின.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், குழந்தைகளின் மரணத்திற்கு பழுக்காத லிச்சி பழங்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனவே, லிச்சி பழங்களின் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் பழுக்காத லிச்சி பழத்தில் குழந்தைகளின் மூளையைத் தாக்கும் மிக மோசமான வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
லிச்சி பழங்கள்...
முசாபர்பூர் மருத்துவமனையில் குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் குறித்த முதல்கட்ட விசாரணையில், அக்குழந்தைகள் அனைவருக்கும் 3 முதல் 5 வயது எனவும், அவர்கள் அனைவரும் அதிகளவில் பழுக்காத லிச்சி பழங்களை சாப்பிட்டதும் தெரியவந்தது.
லிச்சி அமோக விளைச்சல்...
முசாபர்பூர் லிச்சி பழங்கள் சுவையில் தனிப்பெயர் பெற்றவை. இனிப்பான சாகி வகை லிச்சி பழங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம். இம்முறை லிச்சியின் விளைச்சல் அம்மாநிலத்தில் அமோகம் எனக் கூறப்படுகிறது.
நோய்த் தாக்குதல்...
எனவே, சரியாக பழுக்காத லிச்சி பழங்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றைப் பெரியவர்கள் சாப்பிட்ட போதும், குழந்தைகளைத் தான் அப்பழத்திலுள்ள வைரஸ் கடுமையாகத் தாக்கியுள்ளது.
சிறப்பு மருத்துவக் குழு...
இதற்கிடையே மர்ம நோய் தாக்குதலால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், ராஜேந்திரா மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்-ன் சார்பில் ஆறு பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவின் உதவியை நாடினர் உள்ளூர் மருத்துவர்கள்.
பழுக்காத லிச்சி பழங்கள்...
அதனைத் தொடர்ந்து, அக்குழு மேற்கொண்ட விசாரணையில் மாநிலம் முழுவதும் இந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்ட போதும், லிச்சி அதிகமாக விளையும் முசாபர்பூர் மாவட்டத்தில் சற்று கூடுதலாகவே காணப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆய்வு...
உண்மையிலேயே குழந்தைகளின் உயிரிழப்பிற்கு பழுக்காத லிச்சிப் பழங்கள் தான் காரணமா என தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை கிடைத்த தகவலின் படி பழுக்காத லிச்சி பழத்தில் மிக மோசமான வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்சரிக்கை...
இதனால், குழந்தைகளுக்கு அதிக அளவில் பழுக்காத லிச்சியை அளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசின் உதவியை நாடியுள்லார் அம்மாநில சுகாதார அமைச்சர் ராம்தானி.
தகவல்......
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி பீகாரில் கடந்த பத்து தினங்களில் மட்டும் மர்ம காய்ச்சலுக்கு சுமார் 50க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.