டெல்லியில் இருந்த 2 எம்.எல்.ஏக்களை மீட்டு மும்பைக்கு கொண்டுவந்தது என்சிபி
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருடன் முதல்வர் பட்னாவிஸ் நேற்று இரவு 40 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணை மற்றும் அஜித் பவார் அணிக்கான அமைச்சர் பதவிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் காணாமல் போன 2 எம்.எல்.ஏக்களை டெல்லியில் கண்டுபிடித்து மும்பைக்கு அழைத்து வந்தது என்சிபி.
பட்னாவிஸ் தலைமையில் பாஜக-என்சிபி அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று பின்னிரவு அஜித் பவாருடன் முதல்வர் பட்னாவிஸ் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
பட்னாவிஸ்- அஜித் பவார் ஆலோசனை
இந்த ஆலோசனையின் போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள், கடிதங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவது குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இச்சந்திப்பின் போது பாஜக மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவடே, கிரிஷ் மகாஜான் ஆகியோரும் உடனிருந்தனர்.
என்சிபி எம்.எல்.ஏக்கள் கடத்தல்
இதனிடையே தங்களது கட்சியின் 3 எம்.எல்.ஏக்களை பாஜக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதாக என்சிபி சரத்பவார் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சரத்பவார் பிரிவின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 5 எம்.எல்.ஏக்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியாமல் இருந்தது. இவர்களில் 3 பேர் பட்னாவிஸ் பதவியேற்ற சனிக்கிழமையன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
|
டெல்லியில் கண்டுபிடித்த என்சிபி
அவர்களை தற்போதுதான் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் சரத்பவார் தலைமையில்தான் இருக்கிறோம் என எங்களுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பியுள்ளனர் என்றார்.
மும்பை இன்று வருகை
இதனிடையே 3 பேரில் தவுலத் தரோடா, அனில் பாட்டீல் ஆகிய 2 பேரையும் டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்துவிட்டது என்சிபி. இந்த 2 எம்.எல்.ஏக்களும் தற்போது என்சிபி எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹயத் ஹோட்டலில் இருக்கின்றனர்.
எம்.எல்.ஏக்கள் ஹோட்டல் மாற்றம்
இந்நிலையில் நேற்று இரவில் மற்றொரு திருப்பமாக என்சிபி எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த சொகுசு ஹோட்டல் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் மும்பை புறநகரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.