போராட்டத்தை கைவிட்ட நரேஷ் திகைட் முசாபர்நகரில் மகாபஞ்சாயத்து - லட்சக்கணக்கானோர் திரண்டனர்
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகைட் அழைத்த விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டத்திற்கு இன்று பிரம்மாண்ட கூட்டம் கூடியது.
முஷாபர்நகர்: பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகைட் இன்று உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் நடத்திய மகா பஞ்சாயத்து கூட்டத்தில் இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். காசிபூரில் அவரது சகோதரர் ராகேஷ் திகைட் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் நரேஷ் திகைட் இன்று மகாபஞ்சாயத்து கூட்டத்தை கூட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 65 நாட்களாக போராடி வருகின்றனர். விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின் போது திடீர் வன்முறை வெடித்தது. செங்கோட்டைக்குள் நுழைந்து கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். காவல்துறையினர் நடத்திய தடியடியில் விவசாயிகள் காயமடைந்தனர்.
காவல்துறையினர் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தியதில் பல காவலர்கள் காயமடைந்தனர். விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி- உத்தர பிரதேச மாநில எல்லையான காசிபூரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, சாலைகளை காலி செய்ய செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். டெல்லி எல்லை சாலைகளில் மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தோட்டாக்களை எதிர்கொள்ள தயார் என்று 65வது நாளாக காசிபூர், சிங்கு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளில் ஒரு பகுதியினர், உறுதியாக நிற்பதால் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் நரேஷ் திகைட் எல்லையில் நடைபெறும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று நேற்று மாலை அறிவித்தார். அதே நேரத்தில் அவரது சகோதரரும், பாரதிய கிஷான் யூனியனின் செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகைட் நாங்கள் எங்களுடைய தர்ணா போராட்டத்தை நடத்துவோம். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்த இடத்தை காலி செய்யமாட்டோம் என்று கூறினார்.
தண்ணீர், மின்சார வினியோகம் போன்ற அடிப்படை வசதிகளை நிர்வாகிகள் தடை செய்துள்ளனர். நாங்கள் எங்களுடைய கிராமத்தில் இருந்த தண்ணீர் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
விவசாயிகள் காசிப்பூரில் இருந்து இரவுக்குள் வெளியேறாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று காசியாபாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேற்று மாலை கெடு விதிக்கவே பதற்றம் உருவானது. நாங்கள் எங்கும் செல்லமாட்டோம் காவல்துறை என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என இரவில் ராகேஷ் திகைட் அறிவித்தார்.
என்ன நடக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கட்டும். எந்த வன்முறையும் காசிபூரில் நடைபெற வில்லை. ஆனால் இரும்புத் தடிகளுடன் சூழ்ந்து கொண்டு, இடத்தை காலி செய்யுமாறு போலீசார் மிரட்டுகின்றனர். இது உபி மாநில அரசின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போராட்டத்தை கைவிட்ட நரேஷ் திகைட் முஷாபர் நகரில் மகாபஞ்சாயத்து கூட்டத்தை கூட்டினார். கல்லூரி மைதானத்தல் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று பேசினார்.
இதனிடையே காசிப்பூரில் போராட்டக்காரர்கள் கூட்டத்தில் வன்முறையாளர்கள், சமூக விரோதிகள் ஊடுருவாமல் தடுக்கவே விவசாயிகள் வெளியேற்றப்படுவதாக காவல்துறை அதிகாரி பிரசாந்த் குமார் கூறியுள்ளார். போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை சிலர் தூண்டுவதாகவும் தெரிவித்தார் பிரசாந்த் குமார்.
இதே போல சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் காலி செய்து விட்டு அங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும் என கோரி உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கெடு விதித்து இருந்தனர். இன்று சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டது.
உள்ளூர்வாசிகளுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, உள்ளூர்வாசிகள் விவசாயிகளின் கூடாரங்களை பிடிங்கி எறிந்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கல் வீசி தாக்கி கொண்டனர்.
டெல்லி போலீசாரும் சிங்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரும் இந்த கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். லேசான தடியடி நடத்தினர். இதுபோல் திக்ரி எல்லையிலும் ஒரு குழுவினர் போராட்டக்காரர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.