டெல்லியில் விவசாயிகள் தலைகீழாக நின்றும் தொடர் போராட்டம்- அலை அலையாக திரண்ட மாணவர்கள்!
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் தலை கீழாக நின்று போராட்டம் நடத்தினர்.
டெல்லி: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 22 நாள்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை.
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என்.வசீகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் ஒன்றாக திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.