ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
ஜம்மு: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா தற்போது 60,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- எனது தந்தைக்கு( பரூக் அப்துல்லா) லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும், எனது குடும்பத்தினரும் எங்களை தனிமைப் படுத்தி கொள்ள உள்ளோம்.
கடந்த சில நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.