ஆண் குழந்தையை திருப்பதியில் விட்டுச் சென்ற தந்தை... பாட்டியிடம் ஒப்படைத்த போலீஸ் : வீடியோ
மனைவி இறந்ததால், பெற்ற குழந்தையை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி: பெற்ற குழந்தையை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்பு விட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். தாய் வழிப்பாட்டியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் அருள். இவருக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
Recommended Video
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயந்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் ஒரு வயதான ஆண்குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட அருள், குழந்தையைக் கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் சென்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் குழந்தை அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற அருளை சிசிடிவி கேமிரா மூலம் அடையாளம் கண்டு தேடிவந்தனர்.
இந்நிலையில், குழந்தையின் தாய்வழிப் பாட்டி தக்க ஆவணங்களுடன் போலீசாரை அணுகி, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசார் அருளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.