மரபணு மாற்று பயிர்கள் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை: பிரகாஷ் ஜாவடேகர்
டெல்லி: மரபணு மாற்று பயிர்கள் பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சில குறிப்பிட்ட நெல், கத்தரி, பருத்தி உள்பட 15 வகையான மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிர் செய்ய உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையமான மரபணு பொறியியல் அனுமதிக்குழு அனுமதி அளித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது இதற்கு, ஆளும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 2 அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுதேசி ஜக்ரான் மஞ்ச் மற்றும் பாரதிய விவசாய சங்கத்தினர் இதுதொடர்பாக நேற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தனர்.
அப்போது, ''விவசாய நிலத்துக்கும், மனிதர்களின் நலனுக்கும் கேடு விளைவிக்கும் மரபணு மாற்று பயிர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வுகளை நடத்தாமல் அவற்றை அனுமதிக்கக்கூடாது. ஒருமுறை அதனை அனுமதித்துவிட்டால் பின்னர் அதில் இருந்து மீளமுடியாது. மரபணு பயிர்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை.
இது நாட்டின் மிகமுக்கியமான உணவு பாதுகாப்பு பிரச்னை சம்பந்தப்பட்டது. எனவே இந்திய மக்களின் நலம், உணவு பாதுகாப்பு, விவசாய நிலம், நாட்டு நலன் கருதி மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிரிட அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜவடேகரிடம் கேட்டபோது, ''மரபணு மாற்றுப் பயிர்களை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications