வாட்டர் பாட்டிலுக்காக சண்டை.. ''ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்''.. உபியில் கொடூரம்!
போபால்: உத்தர பிரதேச மாநிலம் லலிதாபூர் மாவட்டத்தில் வாட்டர் பாட்டிலுக்காக ஏற்பட்ட பிரச்சினையில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரப்திசாகர் விரைவு ரயிலில் ரவி யாதவ் என்ற 26-வயது இளைஞர் தனது தங்கையுடன் சென்று கொண்டிருந்தார்.
இந்த ரயில் ஜான்சி அருகே வந்த போது, தாகம் எடுத்ததால் ரயிலின் பெட்டிக்குள் விற்பனைக்காக பேன்ட்ரி ஊழியர் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை வாங்கியுள்ளார்.
'பைக் கொடுக்காததால் ஆத்திரம்' . . 'மகனை கோடரியால் வெட்டி கொன்ற தந்தை'. . மத்தியபிரதேசத்தில் கொடூரம்
20 ரூபாய் வாட்டர் பாட்டில்
பாட்டிலை எடுத்து கொடுத்த பேன்ட்ரி ஊழியர் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் எனக்கூறினார். ஆனால், பாட்டிலில் 15 ரூபாய் மட்டுமே போட்டிருந்தது. இதை பார்த்த ரவி யாதவ், ஏன் 5 ரூபாய் அதிகமாக விற்கிறீர்கள். அதெல்லாம் தரமுடியாது எனக் கூறினார். ஆனால், இங்கு விலை இப்படித்தான் என பேன்ட்ரி ஊழியர் கறாராக சொல்லியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ரவி யாதவுக்கும் பேன்ட்ரி ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்து செல்போன் மூலம் தன்னுடன் வேலை பார்க்கும் சக பேன்ட்ரி ஊழியர்களை அந்த நபர் அழைத்து வந்துள்ளார்.
கைகலப்பாக மாறியது
உடனே மேலும் இரண்டு பேன்ட்ரி ஊழியர்கள் ரவி யாதவ் இருந்த பெட்டிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால், ஒரு கட்டத்தில் அவர்கள் பான் மசாலாவை இளைஞர் மீது துப்பியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து இந்த மோதல் கைகலப்பு ஆகியுள்ளது. இதற்கிடையே இளைஞர் இறங்க வேண்டிய லலித்பூர் ரயில்வே நிலையம் வந்து விட்டது. இதனால் ரவி யாதவ் தங்கை ரயில் பெட்டியில் இருந்து இறங்கி விட்டார். ஆனால், ரவி யாதவை இறங்க விடாமல் பேன்ட்ரி ஊழியர்கள் பிடித்து வைத்துக்கொண்டதோடு சரமாரியாக தாக்கியதாகவும் தெரிகிறது.
ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினர்
தொடர்ந்து ரவி யாதவை அந்த பேன்ட்ரி ஊழியர்கள் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். இதில் கிழே விழுந்து படுகாயமடைந்த ரவி யாதவ் வலியால் துடித்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ரவி யாதவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு ஜான்சியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரவி யாதவ் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
வாட்டர் பாட்டிலுக்காக நடந்த சண்டையில் ரவி யாதவ் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு நேர்ந்த துயரம் தொடர்பாக ரவி யாதவ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரயில்வே பேன்ட்ரி ஊழியர்களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323(வேண்டும் என்றே காயத்தை ஏற்படுத்துதல்) 325 (கொடூர காயத்தை ஏற்படுத்துதல்), 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமித் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமும் தீவிர விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.