ஜெ. மீதான ரூ. 2 கோடி பரிசுப் பொருள் வழக்கில் ஜனவரியில் இறுதி விசாரணை!
டெல்லி: கடந்த 1992ம் ஆண்டு முதல் இழுபறியாக இருந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி பரிசுப் பொருள் வழக்கில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த கால திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு இது. நீ்ண்ட காலமாக இழுபறியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு நாள் குறித்துள்ளது உச்சநீதிமன்றம். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதி்மன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு என்ன...?
கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு கி்ப்ட் செக்குகள் வந்தன. முதல்வராக இருப்பவர் இதை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் இதை முதல்வர் ஜெயலலிதா செய்யவில்லை என்று கூறி பின்னர் வந்த திமுக ஆட்சியின்போது வழக்குத் தொடரப்பட்டது.
ஜெயலலிதா தவிர மேலும் இருவர் மீது
ஜெயலலிதா தவிர அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
திமுகவுக்குப் போன அழகு திருநாவுக்கரசு
இதில் அழகு திருநாவுக்கரசு பின்னர் திமுகவுக்குப் போய் விட்டார். செங்கோட்டையன் மட்டுமே தொடர்ந்து அதிமுகவில் இருந்து வருகிறார்.
2006ல் குற்றப்பத்திரிக்கை
இந்த வழக்கில் 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.
டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், காலதாமதமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஹார், இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
காலம் தாழ்த்தும் ஜெயலலிதா
அப்போது, வழக்கை மனுதாரர்கள் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகவும், வழக்கில் இறுதி விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் சிபிஐ கோரிக்கை வைத்தது.
4 வார அவகாசம் கேட்ட ஜெ. வக்கீல்
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் அளிக்க 4 வார அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஜனவரி அல்லது பிப்ரவரியில் இறுதி விசாரணை
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், ஜனவரி அல்லது பிப்ரவரியில் இறுதி விசாரணை நடடைபெறும் என்று உத்தரவிட்டனர்.